Thursday, 26 February 2015

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!!! (2)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!!! (2)ஆலமரத்தின் மொட்டுகளை எடுத்து அடிக்கடி நன்றாக மென்று வாயிலேயே அடக்கி வைத்து பிறகு துப்பினால் பல் வலி குறையும். சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் போல செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும். சேஜ் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி மற்றும் பல் வலி குறையும். துவரை இலைகளை நசுக்கிச் சிறிதளவு பல் வலி உள்ள இடத்தில் இரவில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு அரிப்பு போன்றவை குறையும். புதினா இலைகளை காயவைத்து பொடியாக்கி, உப்புத்தூள் கலந்து பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதி பெறும். பல் நோய்கள் குறையும்.

நுணாக்காயையும், உப்பையும் சம அளவு எடுத்து அரைத்து அடை தட்டி உலர வைத்து அரைத்து பல் துலக்கி வந்தால் பல் நோய்களை தடுக்கலாம். பிரிஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். வெட்பாலை இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால் பல்வலி குறையும். ரோஸ்மேரி இலையின்பொடியினால் பல் துலக்கி வர பல் ஈறுகளில் வலி குறையும். மகிழங்காயை மென்று துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப்படும்.

பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலது புற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட பல்வலி சிறிது குறையும். சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். ஆவாரை இலைப் பொடியைப் புதினா இலைப் பொடியுடன் கலந்து பல் துலக்கி வந்தால் பல் வலி குறைந்து ஈறு உறுதி பெறும்.

அக்கரகாரத்தை தனியாக இடித்தெடுத்து சூரணம் செய்து பற்பொடி யாக‌  உபயோகித்து வர‌ பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையை  தடுக்கலாம். சமஅளவு மஞ்சள் இலை மற்றும் புதினா இலைகளை எடுத்து இரண்டையும் உலர வைத்துப் பொடியாக்கி,உப்புத் தூள் சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் வராமல் தடுக்கலாம். பொடுதலை இலையை அரைத்து நெறிக்கட்டிய இடத்தில் வைத்துக்கட்ட நெறிக்கட்டு மறையும். கண்டங்கத்திரி வேரை நிழலில் உலர்த்தி அதனுடன் காயவைத்த புதினா இலைகளைச் சேர்த்து நன்கு பொடியாக்கி அதைக்கொண்டு தினமும் பல் துலக்க பல்வலி, பல் ஈறு நோய்கள் குணமாகும்.

ஒரு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக அரிந்து  அதை வலி உள்ள பல்லில் வைத்து வாயை இறுக்கமாக மூடி கொள்ளவும். சிறிது நேரத்தில் வலி குறையும். ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிட்டுவர பல்வலி வராமல் தடுக்கலாம். பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி பவுடர் கால் கப், சர்க்கரை கால் கப், பொடித்த பச்சைக் கற்பூரம் 10 கிராம். இவற்றை  சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி பற்கள் பளபளக்கும்.

30 கிராம் அக்கரகாரம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீர்விட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். 100 கண்டங்கத்தரிப் பழத்தைக் கறுகி போகாமல் வதக்கி  வேக விடவும் பாகல் இலை சாறு பிழிந்து அந்த சாற்றிலேயே கண்டங்கத்தரிப் பழத்தை அரைத்து வைத்த விழுதை 500 மி லி நல்லெண்ணெயில் கலக்கி 3 நாட்கள் வெயிலில் காய வைத்து  இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி குறையும். லவங்கம், கற்பூரம், ஓமம் ஆகியவற்றைத் தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். அவற்றில் ஒரு சிட்டிகை எடுத்து வீங்கிய பல் ஈறில் வைத்து அழுத்த வேண்டும். அதனை விழுங்காமல் உமிழ்ந்துக் கொண்டே இருக்கவேண்டும். பிறகு சுடுநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும்.

நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல் ஈறு உபாதை குறையும். துளசிஇலை, உப்பு இவற்றை நன்றாக கசக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குறையும். மிளகு, சர்க்கரை இரண்டையும் நன்றாக அரைத்து வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும். உப்பை வறுத்து அதை இளஞ்சூடாக வலியுள்ள இடத்திற்கு வெளியே வைத்து ஒத்தடம் கொடுத்துவர பல்வலி குறையும்.

இரண்டு கிராம்பை நன்றாகத் தட்டி வலி உள்ள பல்லுக்கு மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டால் பல் வலி குறையும். கண்டங்கத்திரி பழத்தை எடுத்து வெயிலில் நன்கு உலர்த்திய பின் நெருப்பில் போட்டு அந்த புகை வாயில் புகும்படி புகைப்பிடித்தால் பல் வலி குறையும். காட்டாமணக்கு செடியின் இளங்குச்சியால் பல் துல‌க்கி வர பல் வலி குறையும். மாசிக்காயை துளாக்கி  நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால் ஈறு பலமடையும்.

பூச்சி இலை, மிளகு, உப்பு இவைகளை நன்கு அரைத்து வலியுள்ள இடத்தில் வைக்க பல் வலி குறையும். தான்றிக் காய்த்தோலைக் நீரிலிட்டு வாய் கொப்பளித்து  வந்தால் பல் வலி குறையும். வாகை மரப்பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி   செய்து பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும். புங்க மர இலையை காய்ச்சி அந்த நீரை கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி  அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதியாகும்.

செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் பல்வலி வராமல் தடுக்கலாம். பிரமத்தண்டு இலை, பூ, காய் இவற்றை காய வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து தினமும் பல்துலக்கி வர  பல்வலி குறையும். சிவனார் வேம்பின் வேரை வைத்து தினமும் பல் துலக்கி வர பல்வலி குறையும். புளி, உப்பு எடுத்துக் கசக்கி பல்வலி உள்ள இடத்தில் தினமும் வைக்க பல்வலி குறையும். உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து  தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.

புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல்  துலக்கி வர பல்வலி குறையும். புதினாவைக் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட பற்கள் வலுவடையும். தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வர பற்கள் வலுவடையும். கொய்யா இலையை பொடித்து பல் துலக்கினால் பல்வலி குறையும். ஆலம் விழுதினை கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் வலி குணமாகும். ஒரு கரண்டி மிளகுடன் 2 கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்.

துவர்ப்பாக்கு, நெல்லிக்காய் வற்றல், கிராம்பு இவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர  பல் வலி குறையும். கருவேலம்பட்டை, ஆலம் விழுது, தென்னங்குரும்பை ஆகியவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பற்கள உறுதியாக இருக்கும். கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர ஈறுவீக்கம் குணமாகும். கருவேலப்பட்டையை காய வைத்து  பொடியாக்கி தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும். புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல்துலக்கி வந்தால்  பல் கூச்சம் குறையும்.

கோவைப் பழம் அடிக்கடி சாப்பிட பல்வலி குணமாகும். மகிழம் மரத்தின் பட்டையை பொடியக்கி பல் துலக்கினால் பல்வலி குணமாகும். படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வர குணமாகும். சிறிதளவு வெங்காயத்தை எடுத்து  பொடிப் பொடியாக நறுக்கி வலிக்கின்ற இடத்தில் வைத்தால் நீங்கிவிடும். சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும். கடுகை அரைத்து பொடி செய்து பல்வலி இருக்கும்  இடத்தில் பற்றுப் போட்டால் விரைவில் பல் வலி குணமாகும்.

லவங்கத் தைலத்தை பஞ்சில் நனைத்து வலி இருக்குமிடத்தில் வைத்தால் வலி குறைவதோடு இதமாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இந்த வைத்தியத்தை செய்ய வேண்டும். பெருங்காயப் பொடியை  வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும். புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி கடுக்காய் தூள் சேர்த்து  நல்லெண்ணெயில் காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல் வலி தீரும்.

கரும்பை மாதம் ஒரு முறையாவது கடித்துச் சாப்பிடவும். மாவிலையை நன்கு பொடி செய்து காலை மாலை இரு வேளையும் பல் துலக்கவும். கரிசலாங்கண்ணி கீரையை துவரம் செய்து தினமும் மதிய உணவுடன் உண்ணவும். ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு நன்றாக மெல்லவும்.

No comments:

Post a Comment