Friday, 20 February 2015

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!!! (1)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!!! (1)ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும். கருவேலம் பட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து அதில் 30 கிராம் எடுத்து அதனுடன் 6 கிராம் கிராம்பு, மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும். கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும். முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும். பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் குறையும். பல் வலி ஏற்படும் போது பற்களின் மீது தேனை தடவி விட்டு உமிழ்நீர் பெருகி வாயிலிருந்து வெளியேற செய்து வந்தால் பல் வலி குறையும். பல்லில் ஓட்டை அல்லது புழு வெட்டு இருந்தால் தேனை பல்லில் படும்படி நிரப்பி வாய் கொப்பளித்து வந்தால் கிருமிகள் குறையும்.

இஞ்சியை தோல் நீக்கி  இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும். கடுகு எண்ணெய் எடுத்து சிறிது உப்பு சேர்த்து வெளிப்புறமாக தாடைகளில் தடவி நன்கு தேய்த்து வந்தால் பல் வலி குறையும். தாடைகள் மற்றும் பல் ஈறுகள் பலம் பெறும். கொள்ளுக்காய் வேளை செடி வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். 6 கிராம்பு மற்றும் வேப்ப மரப்பட்டைகளை நீரிலிட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து இந்த நீரை வாயில் சிறிது நேரம் வைத்து பிறகு கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும்.

மகிழம்காயை எடுத்து  நன்றாக மென்று  அதை வாயில் அடக்கி வைத்திருந்தால் பல்ஆட்டம் குறைந்து பல் உறுதிபடும். பனங்கிழங்கை குப்பைமேனிச்சாற்றில் அரைத்து நல்லெண்ணெய் யில் காய்ச்சி பல்வலி உள்ள பாகத்தில் துளி துளியாய் விட்டு வர பல்வலி குறையும். 10 கிராம் வால் மிளகு, 8 கிராம் இந்துப்பு ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக இடித்து சலித்து அந்த பொடியை தினமும் பல் தேய்ப்பதற்கு பயன்படுத்தி வந்தால் பல் வலி மற்றும் பல் அசைவு குறையும். மகிழம் இலைகளை எடுத்து கஷாயம் செய்து அதை வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குறையும்.

நந்தியாவட்டை வேரை  சுத்தம் செய்து அதை  வாயில் போட்டு மென்று துப்பி வந்தால் பல்வலி குறையும். நீர்முள்ளி விதை, வசம்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு  எட்டில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை மூன்று நாட்கள் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் ஆட்டம் ஆகியவைகள் குறையும். வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் குறையும். தான்றிக்காயை நன்றாக சுட்டு அதன் மேல் தோலை எடுத்து நன்கு பொடி செய்து சர்க்கரை கலந்து காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல் வலி மற்றும் பல் ஈறுகளில் வலி ஆகியவை குறையும்.

புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, உப்பு ஆகியவற்றை கலந்து இடித்து தூள் செய்து பல் துலக்கி வந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் குறையும். பிரம்மதண்டு இலைகளை எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கவும். பின்பு அந்த சாம்பலை எடுத்து தினமும் பல் தேய்த்து வந்தால் பல்லில் சீழ் வடிதல் குறையும். மிளகுத் தூளும், உப்பும் கலந்து பற்பொடி செய்து பல்துலக்கி வர பல் வலி, பல் கூச்சம் குறையும். பச்சை நன்னாரி வேரைக் வெந்நீர் விட்டு அரைத்து கொட்டைப்பாக் களவு எடுத்து  3 தடவை காலை, மதியம், மாலை என்று பல்லில் இரத்தம் நிற்கும் வரையில் கொடுக்க வேண்டும்.

இரவில் படுக்கப் போகும் முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் கிருமிகள் குறையும். தோல்  நீக்கிய சுக்கை எடுத்து கொள்ளவும். வெட்டுப்பாக்கை இடித்து  நன்றாக வறுத்து கொள்ளவும். உப்பு  நீங்கலாக அனைத்தையும் இடித்து சலித்து  பிறகு உப்பை கலந்து கொள்ளவும். 3 மணி நேரம் வெயிலில் வைக்கவும். பின் இந்த பொடியை வைத்து பல் துலக்கி வர பல் வலி, பல் பலவீனம் குறையும்.

கருங்காலி மரத்திலிருந்து உருவாகும் ஒரு வகை பிசினை பல்பொடி போல் உபயோகிக்க பற்கள் உறுதி மற்றும் பற்கள் வெண்மையாகும். வாயுவிளங்கா வேர்பட்டையினை தூள் செய்து பல் துல‌க்கி வர பல்வலி குறையும். நாயுருவி வேர்  100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம். தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50 கிராம் சுக்கு 50 கிராம் கருவேலப்பட்டை 50கிராம் இந்துப்பு 50 கிராம் இவ‌ற்றை உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து தினமும் இரு முறை பல் துலக்கி வர பற்கள் பளபளவென மின்னும்.

நாகலிங்கம் இலைகளை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேறும் பல்வலி, பற்கள் சொத்தையாகாமல் தடுக்கும். துளசி இலையை சாறு எடுத்து சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர பல் வலி குறையும். கரிசாலையை செடியைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகும்.
கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சல் போன்றவை குறையும். சிறிது படிகாரத்தை தூள் செய்து  தேனில்  குழைத்து  ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து பிறகு  கடித்துச் சாப்பிட்டால்  பற்கள் பலம் பெறும்.
ஆலமரத்து பட்டையை பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய்கள் குறையும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும். துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க‌ பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும். காட்டாமணக்கு இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும். பப்பாளி செடியின் பாலை பல் வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் பல்வலி குறையும்.

அஜ்மோதக இலைகளை மென்று வந்தால் பற்கள் உறுதி பெறும். தாளிசப்பத்திரி இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அந்த பொடியால் பல் துலக்கி வந்தால் பல் வலி குறையும். கரியால் இலைகளை பல் வலியின்  போது மென்றால் பல் வலி குறையும். கருவேல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும். சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தூள், இந்துப்பு சமஅளவாக எடுத்து பொடி செய்து பல்பொடியாக பயன்படுத்த பல் ஆட்டம், பல் சொத்தை குறையும்.

No comments:

Post a Comment